மே 2024
தம்பி பாலச்சந்திரன் (இதுவரை அறிந்ததும் அறியாததும்)
“ பாலச்சந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இன அழிப்பினால் செத்துப் போன குழந்தைகளின் அடையாளமாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலகன். சர்வதேசத்தின் கண்களுக்கு இரத்தச் சிதறலின் வலிமையை உணர்த்திச் சென்ற சின்னவன். அவனை எம் சிறுவர்களின் குறியீடாக எடுத்துக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய தாளாத துயர நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.
இன்றும் அனைவரது மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பான் அந்தக் குழந்தை. துரு துரு என ஓடும் அவன் கால்களும், எந்நேரமும் அறிவார்ந்த சிந்தனையோடு கற்றவர்களைக் கூட ஒரு நிமிடம் யோசிக்க வைக்கிற கேள்விக் கணைகளால் துளைக்கும் அவனது திறமையும், அவனை அனைவராலும் கவரப்பட்டவனாக வெளிகாட்டியது என்றால் அதில் எந்த மிகையும் இல்லை.
1996 ஐப்பசி திங்கள் பத்தாவது நாள் முல்லைத்தீவு மண்ணில் இருந்து கொடியவர்களை விரட்டியடித்த வெற்றிச் செய்தியை தாயகம் கொண்டாடிக் கொண்டிருந்த தருணம், தேசியத் தலைவருக்கு முள்ளியவளை மண்ணில் இருந்து ஒரு செய்தி வருகிறது.
“ஆண் பிள்ளை பிறந்துள்ளது”
ஒரு பெரும் வெற்றிச் செய்தியோடு வந்து உதித்தவன் தான் பாலச்சந்திரன். ஆனால் அதே முல்லை மண்ணில் கொடியவர்களால் அவன் பலிகொள்ளப்பட்டு விட்டான் என்பதை ஏற்க மறுக்கிறது மனது. பிறந்தது முதல் ஒரு பெருவீரனின் மகனாக மட்டும் அல்லாது, ஒரு மாவீரனின் பெயரையும் தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த குழந்தையாக அவன் வளர்ந்து வந்தான். ஒரு மூத்த சகோதரனோடும், செல்லமான ஒரு அக்காவோடும் கூடப் பிறந்த பாலச்சந்திரன், அனைவரையும் விட தனது தந்தையின் மீது அதிக பாசமும் அன்பும் கொண்டவனாக வளர்ந்தான். எதையும் ஆய்வு செய்வதிலும் அவை குறித்து தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வதும் அவனுள் சிறுவயது முதல் இருந்த ஒரு சிறப்பம்சம்.
பாலச்சந்திரன் குறித்து அவனது பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு போராளி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட போது ( தரவுகள் : உயிர்ப்பூ வலையொளி )“தம்பி சரியான சுட்டி… எப்போது பார்த்தாலும் எதையாவது செய்து கொண்டே இருப்பான். சும்மா இருக்க மாட்டான். எடுத்துக்காட்டாகக் கூறின் அண்ணன் எப்போதாவது ஒரு நாள் வீட்டுக்கு இவர்களைப் பார்க்க வருவார். வரும் போது அவருடனே எப்போதும் இருக்கும் அவருடைய கைத்துப்பாக்கி, யாரும் எடுத்து விடக்கூடாது என்ற கட்டளையுடன் அதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அப்போது அதை யாரும் எடுக்க மாட்டார்கள். அவரின் வீட்டில் கட்டுப்பாடுகள் நிறைய. அதனால் அனைவரும் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டே இருப்பார்கள், ஒரே ஒருவனைத் தவிர… பாலா ஒருநாள் பிஸ்டலை எடுத்து வந்து அதைப் பற்றி தந்தையிடமே “இதை எப்பிடி அப்பா பயன்படுத்துவது? “ என்று வினவுகிறான். அதைப் பார்த்த அண்ணன் அவனிடம் இருந்து பிஸ்டலை வாங்கி அது தொடர்பாக வயது வரும்போது கற்றுக் கொள்ளலாம் எனக் கூறுகிறார். அப்போது பாலாவுக்கு 2 அல்லது 3 வயது இருக்கும்” எனப் பகிர்ந்து கொள்கிறார்.
எதையும் தேடும் முயற்சியுடைய பாலா தலைவரைப் போன்ற உருவம் மட்டுமல்ல அவரது அனைத்து பண்புகளையும் கொண்டு முள்ளியவளை மண்ணில் வளரத்தொடங்கினான். அனைவருடனும் சந்தோசமாகப் பழகுவதற்கும் விரும்பும் இடத்திற்கெல்லாம் எம்மை போல விரும்பிய நேரத்தில் கிளம்பிச் செல்வதற்கும் பாதுகாப்புச் சிக்கல்கள் பாலச்சந்திரனுக்கு இடமளிக்காது.
சிறு வயது முதல் குறித்த சில நண்பர்களுடனும் போராளிகளுடனும் பழகி வந்த பாலாவுக்கு பாடசாலைக் கல்வி என்பது பலத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்பது உண்மை. இந்த நிலையில் அங்கு தன்னுடன் கற்ற சக மாணவர்கள் அனைவரோடும் சம உரிமையுடன் பழகுவதும் ஆசிரியர்கள் அனைவரிடமும் அதீத மரியாதையுடன் நடப்பதும் அவனது சிறப்பம்சம்.

தலைவர் மகன் என்ற பெருமையில்லாத நட்பான அணுகுமுறை அவன் பள்ளியில் அனைவராலும் கவரப்படுவதற்கு ஒரு காரணம். வெளியில் இருப்பவர்களுக்கு அவன் யார் என்று தெரியாத நிலையில் இருந்தாலும், அவரது பண்புகளும் செயற்பாடுகளும் அவரை இனங்காட்டி விடும்… இது சாதாரண குழந்தை அல்ல… மிகப்பெரிய அறிவாற்றல் நிறைந்த குழந்தை என அனைவரும் நினைக்கும் வண்ணம் அவனது செயல்பாடுகள் மனதைக் கவரும்.
சாதாரணமாக எம்மில் பலர் அவர்களது தந்தை உயர் நிலையில் இருந்தால் பிறரை மதிக்க மாட்டார்கள். மற்றவர்களைத் தூக்கி எறிவதும், அவர்களை அவமதிப்பதும் பலரது கீழ்த்தரமான நடத்தைகளில் ஒன்று… இது அனைத்துக்கும் இடையில் இந்தச் சிறுவன் வேறுபட்டவனாகத் தான் இருந்தான்… நான் தலைவரது மகன் எனப் பெருமையாக என்றுமே பேசாத பாலா, அத்தனை அடக்கமும் நட்பும் மிகுந்தவன்.
“ஒருநாள் அவன் கல்வி கற்ற பாடசாலையில் வைகப்பட்டிருந்த தலைவரது புகைப்படத்தைப் பார்த்து கொண்டு நிற்கிறான் வேறொரு சிறுவன். அவன் அருகில் வந்த பாலா “யார் இது ?” என்று வினவ இவர் எங்கட மாமா எனக்கு இவரை ரம்ப பிடிக்கும் என்று அவன் சொல்ல, எந்த உணர்ச்சியையும் காட்டாது சிரித்துவிட்டுச் சென்று விடுகிறான். அதைத் தவிர அவர் என் தந்தை என்பதை கூறிப் பெருமைப்படவில்லை எங்கள் தம்பி.

எதற்கும் அடிபணியாத அண்ணனைப் போன்ற உருவம் மட்டுமல்ல, அண்ணனின் அனைத்து பண்புகளையும் கொண்டவன். தலைவர் வீட்டில் இருக்கும் போது என்ன எல்லாம் செய்கிறாரோ அத்தனையையும் தானும் செய்து பார்க்க வேண்டும் என்று முயலுவான்.
அண்ணைக்கு சமையல் என்றால் மிக விருப்பம். அத்தனை வேலைப்பளுவுக்கு இடையிலும் நிறைவாகவும் சுவையாகவும் சமைத்துத் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு உணவு கொடுப்பார். அந்த நேரத்தில் பாலாவும் அவரை போலவே சமையல் பழகுவதில் முனைப்பு காட்டுவான். சாதாரணமாகச் சமையல் தொடக்கம் ஆயுத கையாள்கை வரைக்கும் தானும் செய்ய வேண்டும் என்று அனைத்திலும் தனது ஆர்வத்தைக் காட்டி அண்ணனைப் போலவே தன்னை வளர்த்துக் கொள்ள முனைப்பு காட்டியவன். ஆனால் இறுதி வரைக்கும் அவன் துப்பாக்கிகள் தொடர்பாகக் கற்றது இல்லை; காரணம் அவனுக்கு அதற்கான வயது வரவில்லை.
பாலச்சந்திரனது இசை ஆற்றல் மற்றும் ஆர்வம் பற்றியும் கட்டாயமாக பதிவிட வேண்டும். பாலச்சந்திரன் தலைவனைப் போலவே மிக அதிகமாக விரும்பி கேட்கும் பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் தமிழீழ எழுச்சிப் பாடல்கள் முக்கிய இடம் பிடிக்கும். வெளியிடங்களுக்குச் செல்லக் கிளம்பும் போது வாகனத்தில் ஏறியவுடனே தமிழீழ எழுச்சி கானங்களைப் போட்டு கேட்கத் தொடங்கி விடுவான். தனது முயற்சிகளில் எப்போதும் தோற்று விடக்கூடாது என்ற நினைப்பு உள்ளவன். அதனால் அனைத்து விடயங்களிலும் அதிக அக்கறை எடுத்துச் செயல்படுவான். விளையாட்டுக்களில் ஈடுபடும் போது இவரது அணி தோற்று விட்டால் தான் வெற்றியடையும் வரை அனைவரும் தன்னுடன் விளையாடும் படி அன்புக் கட்டளையிடும் பாலச்சந்திரன், தான் வெற்றியடைந்தவுடன் தான் விளையாட்டை முடிக்க அனுப்பதிப்பான்.
பாலச்சந்திரனுக்கு அப்போது 6 வயது… மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்த அணில் குஞ்சு ஒன்றைத் தூக்கித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் பாலினை ஒரு துணியில் நனைத்து நனைத்து எடுத்து அணிலுக்கு ஊட்டி விட்டதும், அதைத் தடவிக் கொடுத்து வளர்த்ததும் இப்போது என் கண்களில் மறையாமல் நிற்கிறது. அன்று முதல் அணில் பாலாவின் நண்பனாகி அவருடனே கூட இருந்து விளையாடும். பறவைகள் நாய் என்று அனைத்து மிருகங்களிலும் பாசம் வைத்து கவனிக்கும் இந்தக் குழந்தையைத் தான் கொடூரமாகச் சுட்டு கொலை செய்து இருக்கிறது கொடிய சிங்களம்.
கல்லூரி நிகழ்வு ஒன்றுக்கு தாயுடனும் செஞ்சோலை பொறுப்பாளர் ஜனனி அக்காவுடனும் வந்திருந்தான் பாலச்சந்திரன். அங்கே தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய உருவாக்கங்களை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தார்கள். ஒவ்வொன்றையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன். மேலும் அங்கே இருந்த மாணவர்களைக் கலங்கடிக்கும் புரியாத பல வினாக்களைக் கேட்கிறான். முதலில் யார் இந்தச் சிறுவன் என்று தெரியாது இருந்தாலும் கூட வந்திருந்த தாயைக் கண்டவுடன் பலர் புரிந்து கொள்கின்றனர். அவர்களும் அவனிடம் நெருங்கி அதற்கான விடைகளை அல்லது விளக்கத்தைக் கொடுத்து கொண்டிருந்தனர்.
அங்கு இருந்த மாணவி ஒருத்தியிடம் வந்த பாலா கேட்ட வினாவுக்கான விடை அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவனுக்கு அது தொடர்பான சிறு அறிமுகம் தெரிந்திருந்தது. அதனை அவளுக்கு உரைத்து இது தொடர்பாக இன்னமும் நீங்க படிக்க வேண்டும் படியுங்கோ என்று கூறி நகர்ந்தான். அவளுக்கோ அவனைத் தூக்கி முத்தமிடத் தோன்றியது. ஆனால் அண்ணனின் பிள்ளையை எப்படி…? மனதில் எழுந்த தயக்கம் அவளைத் தடுத்தது.
அதைத் தாண்டிச் சென்று அடுத்த மாணவியிடம் சென்றவன் E-Medicine என்ற உயர் தொழில்நுட்பத்தைப் பார்க்கிறான். இரண்டு மடிக்கணினிகள் மற்றும் இணையத் தொடர்பின் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சையை எங்கோ தூர இருந்தே செய்ய முடியும் என்பதை அந்த மாணவி கண்டுபிடித்திருந்தாள்.
அது பற்றி பாலா நிறைய கேள்விகளை அந்த மாணவியிடம் கேட்கிறான். கேள்விகளுக்குச் சரியான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் பாலா வேகமாக அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்ட போது சமாளிக்க முடியாமல் அந்த மாணவி சிரிக்கிறாள். தாயை நிமிர்ந்து பார்க்கிறாள். தாய் சிறு புன்னகையுடன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த மாணவியையே பார்த்துக் கொண்டு நிற்கிறார். அது வேறு யாரும் இல்லை, பாலாவின் சகோதரி துவாரகா தான். அமைதியின் உச்சம். புன்னகையின் மறு உருவம். பழகும் போது அன்பும் மகிழ்வும் பொங்கி வரும் தாயின் உருவம்.
“தம்பி… என்ன நீங்கள் இப்பிடி அக்காவ கேள்வி கேட்கிறீங்கள்? அக்கா வீட்டை வந்து தம்பிக்கு சொல்லித்தாறன். சரியா?”
அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. தன் தம்பியிடம் வேண்டுகோள் விடுக்கிறாள். பாலாவும் புன்னகையோடு சரி அக்கா என்று நகர்கிறான். இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருமே சரியான சுட்டி என்று முணுமுணுத்துக் கொண்டார்கள்.
வீட்டில் இருக்கும் போது சாதாரணமாக சகோதரச் சண்டை வரும். அக்காவும் தம்பியும் எதற்காக என்றாலும் சண்டை பிடிப்பார்கள். ஆனால் மறு நிமிடம் பாலா “அக்கா மன்னிச்சு கொள்ளுங்கோ மன்னிச்சு கொள்ளுங்கோ “ என்று அக்காவை சமாதானப்படுத்துவதும், துவாரகா தம்பியை பார்த்துச் சிரிப்பதும் வழமையாக நடக்கும். தனது மடிக்கணினித் திரையில் அதிகமாக தானும் தம்பியும் சேர்ந்தெடுத்த படத்தையே திரையின் பின்னணியில் வைத்திருக்கும் துவாராவுக்கு அதிகம் பிடித்த உறவென்றால் பாலாதான். எப்போதும் தம்பி தம்பி என்று அவனில் உயிரையே வைத்திருப்பாள். அதைப் போலவே பாலாவும் அக்காவில் சரியான பாசமுள்ளவன்.
அணில் குஞ்சைக் கூட காப்பாற்ற நினைத்த இந்த பிஞ்சு உள்ளத்தை, நாயைக் கூட தனது உறவு என்று நினைத்து பாசம் காட்டிய அந்தச் சிறு குழந்தையை சிங்களவன் வெற்றுடலாக்கியதை நினைத்து ஒவ்வொரு தமிழனின் இதயமும் கண்ணீர் உகுத்து வேதனையில் இருண்டு கிடந்தது.

கையில் சிற்றுண்டியைக் கொடுத்து உண்ணச் சொல்லும் சிங்களக் கொலைகாரக் கூட்டத்தின் சுயரூபத்தைக் கூட உணர்ந்திருப்பான் இந்தப் பிள்ளை. தன்னைக் கொல்லப்போகிறார்கள் என்பதைக் கூடப் புரிந்து கொண்டிருப்பான். ஏனெனில் அவன் தலைவரை மாதிரி தீர்க்கதரிசனம் உடையவன். ஆனாலும் சாப்பிடச் சொல்லிக் கொடுத்த உணவு தொண்டை வழி உள்நுழையும் முன்பே தன்னைக் கொல்வான் இந்தச் சிங்களவன் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான். பசித்திருந்த குழந்தைக்கு துப்பாக்கி தோட்டாக்களைப் பரிசாகக் கொடுத்த சிங்களத் தலைமைகளும், சிப்பாய்களும் இன்று சுதந்திரமாக மீண்டும் மீண்டும் தமிழனது தலைமுறையை அழிப்பதற்காக முனைப்பு காட்டி வருவது, ஒவ்வொரு தமிழனுக்கும் எத்தகைய ஆபத்து என்பது வெளிப்படை உண்மை.

இவனைப் போலவே பல ஆயிரம் குழந்தைகளை சிங்களப் படைகள் அழித்தது என்பதை உலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்பது புரியவில்லை. தாய்ப்பால் வற்றி பசியில் துடித்த சிறுவர்களுக்கு சிறிது ரொட்டியும், பால் மாவும் கொடுப்பதற்குத் தானே வலைஞர்மடத்தில் வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் மேலே எப்படி இந்தச் சிங்களத்தால் எறிகணைகளை ஏவ முடிந்தது? சாகப்போகிறேன் எனத் தெரிந்தும் தான் சாப்பிட்ட ரொட்டித் துண்டை இறுகப் பற்றிக் கொண்டருந்த 3 வயது சிறுமி ஒருத்தியின் கைகளைக்குள் இருந்த ரொட்டி இந்த சர்வதேசத்துக்கு இனியும் எதை உரைக்க வேண்டும்…?
கால் கைகளை இழந்து கண் பார்வை இழந்து இன்னும் துயரப்படும் என் தேசக் குழந்தைகளுக்கு இந்த சர்வதேசம் என்ன செய்யப் போகிறது? பாலாவைப் போல கொல்லப்பட்ட என் தேசக் குழந்தைகளுக்கான நீதியை இனியும் இந்த சர்வதேசம் தராதுவிடின் நாம் எங்கே சென்று முறையிடுவது? சர்வதேசமே! உன் முன்னே கிடத்தப்பட்டிருக்கும் செத்த இந்தப் பிஞ்சுகளின் உயிரற்ற உடல்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறாய்? அவர்களைச் சாவின் பிடியிலிருந்து உன்னால் ஏன் காப்பாற்ற முடியவில்லை என்ற கேள்விக்கு என்ன கூறப்போகிறாய்? அவர்களின் அநியாய கொலைக்கான நீதியை நீ எப்போது வழங்கப்போகிறாய்?
திரு. வன.லெனின்,
ஊடகப் பிரிவு,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.