spot_img

விட்டுக் கொடுத்ததால் சுட்டுக் கொல்லப்படும் தமிழினம் (கச்சத்தீவு வரலாறு)

சூன் 2022

விட்டுக் கொடுத்ததால் சுட்டுக் கொல்லப்படும் தமிழினம் (கச்சத்தீவு வரலாறு)

இந்திய ஒன்றிய அரசின் இரண்டகத்தால் கச்சத்தீவை இலங்கையிடம் இழந்த நாள். சூன் 28, 1974.

கச்சத்தீவு

மீனவர்களின் வாழ்வாதாரத்துடனும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்புடையதாகவே பார்க்கப்பட்டு வரும் “கச்சத்தீவு” என்றால் என்ன? எப்படி உண்டானது? ஏன் நம் கையைவிட்டுப் போனது என்பது குறித்து விரிவாகக் காண்போம்.

கச்சத்தீவு வரலாறு

கச்சத்தீவு, யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்திய தீபகற்பத்திற்கும். இலங்கைக்கும் இடையில் உள்ளது. சேதுபதி அரச பரம்பரைக்குப் பாத்தியப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, புனவாசல், முயல் தீவு, பூமரிசான் தீவு, குருசடித் தீவு, இராமசாமித்தீவு, மண்ணாலித்தீவு, கச்சத்தீவு, நடுத்தீவு, பள்ளித்தீவு. நல்ல தண்ணீர் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமையாக இருந்தன.

தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு இல்லாத நிலையில் (1795 இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு, “கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி” வடக்கு மாவட்டம், யாழ்ப்பாணம் கோட்ட பிரிவுகளின்கீழ், தற்போது இலங்கைக்குச் சொந்தமாக உள்ளது.

கச்சத்தீவு அமைப்பு

கச்சத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் (1.15 சதுர கிலோ மீட்டராகும்). கச்சத்தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத்தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத்தீவும் ஒன்றாகும். 1480ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும், அதை சுற்றி 11 தீவுகளும் உண்டானதாக சொல்லப்படுகிறது. இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை.

அந்தோணியார் ஆலயம்

கச்சத்தீவில் புகழ்பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். இலங்கையில் இனக் கலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதித் தீவாக விளங்கிய கச்சத்தீவு, 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கை எல்லைக்குப் போனது. ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கித் திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. மீன் பிடிக்க அனுமதி இல்லை.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்குப் பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த கிறித்தவர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கச்சத்தீவு உரிமையை இழந்து வரும் நிலையில் இந்தாண்டு (2022) மார்ச் மாதத்தில் தமிழகத்திலிருந்து 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கச்சத்தீவில் சிங்கள அரசின் முழு ஒத்துழைப்புடன், சீன அதிபர் நுழைந்து, இதுதான் தொடக்கம் என்று கூறி இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலை விதைத்திருக்கிறார்.

கச்சத்தீவு இந்திய உரிமை என்பதற்கானச் சான்றுகள்:

1. சேதுபதி அரச மரபினருக்குப் பாத்தியப்பட்ட நிலப்பகுதியில் கச்சத்தீவும் அடங்கியிருந்தது. குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமையாக இருந்தன.

2. ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு நூலில் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ஆம் ஆண்டு தோன்றிய இத்தீவுகள் யாவும் சாமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.

3. தளவாய் சேதுபதி காத்தவர் என்ற கூத்தன் சேதுபதி 11. (1622 1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் ぬわけ சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

4. இராமேசுவரம் இராமநாதசுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம். அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத்தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத்தீவில் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. அங்கிருந்து அபிசேகத்திற்குப் பாலும், தேவையான பஞ்ச கவ்யங்களும் வந்தன.

5. தாயுமானவர், இலங்கையின் வடபகுதியிலிருந்து தமிழகம் நோக்கி வந்த டச்சுக்காரர்களைச் சேதுபதிக்கு ஆதரவாகப் படை நடத்திச் சென்று, கச்சத்தீவுக்கு அப்பால் விரட்டியடித்து கச்சத்தீவை சேதுபதிக்கு உரித்தாக்கினார் என்பர்.

6. டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை. 17ஆம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார். அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை. முத்துராமலிங்க சேதுபதி 1767ஆம் ஆண்டு முத்துக் குளிக்கும் சில கடற்கரைக் கிராமங்களையும், தீவுகளையும் பெற்றிருந்தபோது, மன்னாரிலிருந்து பாம்பனுக்கு டச்சுக்காரர்களை வர அனுமதியளித்தார். டச்சுக் கப்பல் வரும் இடங்களில் ஒன்றாகக் கச்சத்தீவு குறிக்கப்பட்டிருந்தது.

7. டச்சுக்காரர் அனுமதியைப் பெற்றிருந்தாலும், ஜமீனைச் சேர்ந்தவர்கள் எவர் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமென்றாலும் கச்சத்தீவுக்குச் செல்லலாம். டச்சுக்காரர்கள் தடுக்கக்கூடாது என்ற விதி ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் சேதுபதி ஜமீன்தாரின் கச்சத்தீவு பரம்பரை உரிமை நிலைநாட்டப்பட்டது.

8. 1802ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமீன்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.

9. 1803 ஆம் ஆண்டு முதல் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டு வரப்பட்டது. 1795 ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்து மறைந்தபின் சேதுபதி அரா கட்டிலில் எவரும் ஆட்சி புரியவில்லை. இருப்பினும் முத்துத் திருவாயி நாச்சியார் மகளும், 1795 இல் மரணம் அடைந்த முத்துராமலிங்க சேதுபதியின் தமக்கையுமாகிய இராணி மங்களேசுவரி நாச்சியாரை, இந்தியாவில் நிர்வாகம் நடத்தி வந்த பிரிட்டிஷ் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 ஆம் ஆண்டில் பட்டம் ஏற்று 1812 ஆம் ஆண்டு வரை நிர்வாகத்தில் இருந்தார்.

10. கிழக்கிந்திய கம்பெனி 1822ஆம் ஆண்டில் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.

11. ஜமீன்தாரிணிக்கு “இஸ்திமிரார் சனட்” என்ற ஜமீன் உரிமைப் பட்டயம் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டயத்தில் சேதுபதி ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கிந்தியக் கம்பெனியார் 1822 ஆம் ஆண்டு சேதுபதி ஜமீன்தாரிடமிருந்து கச்சத்தீவைக் குத்தகைக்குப் பெற்றனர். அப்போது நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் நிர்வாகம் நடைபெற்றாலும் தீவுகள் ஜமீன் வசமே இருந்தன.

12. 18.57 61 ஆம் ஆண்டுகளில் இலங்கை தேசப் படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.

13.ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானம் பெரிய அளவில் பெருகியதாலும், கம்பெனி இயக்குநர்கள் மீது பல புகார்கள் கூறப்பட்டதாலும், இந்திய ஆட்சியைக் கம்பெனியார் வசமிருந்து இங்கிலாந்து அரசு மேற் கொண்டது. 1.9.1858இல் கம்பெனிக் கொடியை இறக்கி யூனியன் ஜாக்கொடியை ஏற்றி, இந்திய நாட்டைக் கம்பெனியார் இங்கிலாந்து அரசிடம் ஒப்படைத்தனர். விக்டோரியா மகாராணி தன் பிரகடனத்தில் இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவைக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பின்னாளில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி.பியரீஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

14. “கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்தது’ என்று குறிப்பிட்டே 23.06.1880இல் பதிவு செய்யப்பட்ட அந்த ஆவணம் கூறுகிறது என்று சொல்லி, “இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த 8 கடற்கரை கிராமங்களையும், கச்சத்தீவு, மண்ணாளித் தீவு, முயல் தீவு, குத்துக்கால் தீவு ஆகிய நான்கு தீவுகளையும் இராமநாதபுரம், மதுரை மாவட்டச் சிறப்பு ஆட்சியர் எட்வர்டு டர்னர் அவர்களிடமிருந்து, கீழக்கரை சாயபு மாப்பிள்ளை மரக்காயர் மகன் ஜனாப் முகம்மது அப்துல் காதர் மரக்காயர் அவர்களும், இராமசாமிப் பிள்ளை மகன் முத்துசாமிப் பிள்ளையும் கூட்டாக வருடம் ஒன்றுக்கு எழுநூறு ரூபாய் குத்தகை எடுத்தனர். அதற்குரிய பத்திரம் இராமநாதபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் 02.07.1880 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது (பதிவு எண்: 510 / 1880, புத்தகம் 1, 16 ஆம் வால்யூம்)

15. 4.12.1885 அன்று சேதுபதியவர்களின் எஸ்டேட் மேலாளர் டி. ராஜாராம ராயரிடமிருந்து முத்துசாமிப் பின்ளை என்பவர் சாயவேர் சேகரிக்கக் கச்சத்தீவை ஆண்டுக்குப் பதினைந்து ரூபாய்க்குக் குத்தகைக்கு எடுத்துள்ளார். இதன் ஆவண எண் 134/85,

16. இந்திய நில அளவைத் துறையினர் 1895, 1930 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் கச்சத்தீவு வந்தனர். அவர்கள் வரைந்த வரைபடங்களின் அடிப்படையில் 1952, 1956 ஆம் ஆண்டு வெளியீடுகளில் வெளியிட்ட அதில் கச்சத் தீவையும் குறித்தனர். இராமேசுவரத்தின் ஒரு பகுதி கச்சத்தீவு என்றும் குறிப்பிட்டனர்.

17. இலங்கை நெல்லிமலைத் தோட்டத்திலுள்ள சோலை மலை ஆசாரி என்பவர் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். இராமநாதபுரம் ஜமீன்தாரர் பாஸ்கர சேதுபதியவர்களும், கவாமி விவேகானந்தரும் ஒருங்கு வீற்றிருக்கும் அரிய காட்சியைக் கண்ட சுந்தரப் புலவர் என்பவர் சில பாடல்கள் பாடியதாகவும், அதைக் கேட்டு மகிழ்ந்த பாஸ்கர சேதுபதியவர்கள் கச்சத்தீவின் ஒரு பகுதியை அனுபவிக்கச் சுந்தரப் புலவருக்கு உரிமை கொடுத்ததாகவும் சோலைமலை ஆசாரி எழுதியுள்ளார். விவேகானந்தர், பாஸ்கர சேதுபதியவர்களுடன் இருந்த நாள் 27.1.1897 ஆகும்.

18. 1905 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லலாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

19. 1.7.1913 இல் சென்னை மாகாண அரசுச் செயலர், சேதுபதி மன்னரிடமிருந்து சில தீவுகளைப் பதினைந்து ஆண்டுகட்குக் குத்தகைக்கு எடுத்தார். சேதுபதியரசருக்குச் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் ஐம்பதாயிரம். அதில் “ஜமீன்தாரிக்குச் சொந்தமான இராமேசுவரத்தின் வட கிழக்கில் உள்ள கச்சத்தீவு” என்று குறிக்கப்பட்டுள்ளது.

20. 1913 முதல் 1928 ஆண்டு வரை சென்னை மாகாண அரசின் மீன்வளத் துறை குத்தகைக்கு விட்ட இடங்களில் கச்சத்தீவும் ஒன்று. சேதுபதியரசரிடமிருந்து சென்னை மாகாண அரசு அதிகாரிகள் கச்சத்தீவைக் குத்தகைக்குப் பெற்று, மீனவர்கட்குக் குத்தகைக்கு விட்டதுடன், சேதுபதியரசர்களின் அதிகாரிகளும் நேரடியாகக் குத்தகைக்கு விட்டுள்ளனர். அனைத்திலும் கச்சத்தீவு இடம் பெற்றுள்ளது.

21. ” 1936 – 40 ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறைபில் உதவி வரைவாளராக இருந்தேன். இலங்கை வடக்கு மாவட்ட எல்லைகள் பற்றிப் பரிசீலனை செய்தேன். பழைய ஆவணங்கள், வரலாற்றுச் சான்றுகளைப் பார்வையிட்டேன். விக்டோரியா மகாராணியாரின் பிரகடனத்தில் கச்சத்தீவு சேதுபதி மன்னர்கட்கு உரியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறே கச்சத்தீவை நீக்கி வடக்கு மாவட்டப் படம் வரைந்தேன்”, என்பது இலங்கை அமைச்சரவை அரசுச் செயலாளர் பி.பி.பியரிஸ் (IL.P.Pieris) கூறிய சொற்களாகும். இவை கூறப்பட்டது 8.5.1966 அன்று.

22. இராமநாதபுரம் சேதுபதி அவர்களின் ஆட்சிச் செயலர் 20.4.1950 இல் எஸ்டேட் மேலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கச்சத்தீவு பற்றியும், 1929 1945 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாண அரசின் மீன்பிடித் துறை. அதனைக் குத்தகைக்கு எடுத்து அனுபவித்தது பற்றியும், மீன் பிடிப்பவர் கட்கும், சங்குகள் சேகரிப்பவர்கட்கும் அவைகளைக் குத்தகைக்கு விடப்பட்டது பற்றியும் எழுதியுள்ளார்.

23. ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளி விவரங்கள் அடங்கிய பின்னிணைப்புகளில் கச்சத்தீவு உள்ளது.

24. 1899ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும், ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250, பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

25. 1921ஆம் ஆண்டு கொழும்பு நகரில் நடைபெற்ற குழுக் கூட்டம் ஒன்றில் சென்னை மாகாண ஆங்கிலேய அதிகாரி ஏ.ஜி.லீர் என்பவர் கச்சத் தீவு பற்றிய சேதுபதி மன்னர்களின் உரிமை ஆவணங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.

26. தொண்டி, நம்புதாழையைச் சேர்ந்த மீனவர் பலர் அவ்வாறு குத்தகைக்குப் பெற்றுள்ளனர். 19.2.1928 இல் இராமநாதபுரம் திவான் ஆர். சுப்பையா, அரசர் ஆர். ராஜேஸ்வர சேதுபதிக்கு ஜமீன் கடல் எல்லைப் பற்றி எழுதிய 12.02.1922 தேதியிட்ட கடிதத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன. இதைப் பரிசீலித்து சேதுபதியவர்கள் 27.2.1922 இல் கையொப்பமிட்டுள்ளார்கள்.

27. “கச்சத்தீவின் உரிமை பற்றி இப்போது பேசவில்லை. மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஆவணப்படி இந்திய அரசோ அல்லது சென்னை மாகாண அரசோ கச்சத்தீவிற்கு உரிமை கொண்டாடுவதை இந்த ஒப்பந்தம் தடுக்கா நு என்று இலங்கைக் குழுவின் தலைவர் கூறினார். இது ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.

28. சென்னை நிலத் தீர்வை உதவி அலுவலர் எஸ்.ஏ.விஸ்வநாதன், 11.11.1958 இல் வெளியிட்ட இராமேசுவர நிலப் பதிவேடு எண்.68இல் கச்சத்தீவு இராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

29. 01.07.1947லிருந்து 30.06.1949 வரையிலான மூன்று பசலி ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் வகையில் ராமேஸ்வரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 278/48 ஆக 26.07.1947 தேதி பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம். 1947 ஆம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சத்தீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.

30. இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில், இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும்போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்தாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி.பி.பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.

31. 1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வி.பொன்னுசா பிள்ளை, கே.எஸ்.முகமது மீர்ஸா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தில் ஒரு வரைபடம் உள்ளது. கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரமாக இந்த வரைபடம் விளங்குகிறது. இலங்கையின் பழைய வரலாற்று ஆவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத்தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை. இதுவரையில் கச்சத்தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.

32. ராமநாதபுரம் ராஜாவின் நிர்வாகச் செயலர் 20.04.1950 அன்று எஸ்டேட் நிர்வாகிக்கு எழுதிய கடிதம். கடித R.O.C.எண். 445/A2/50. 1929லிருந்து 1945 வரை சங்கு சேகரிப்பது குறித்த கோப்புகளை அனுப்பியது குறித்த கடிதம்.

33. 1957 ஆம் வருடம் வெளியிடப்பட்டு, 1.1.1966 இல் திருத்திய இரண்டாம் பதிப்பாக வெளிவந்த ஆவணப் பதிவு நூலில் 107 ஆம் பக்கம் தனுஷ்கோடிக்குச் சேர்ந்த குடியில்லாத சிறு கிராமமாக கச்சத்தீவு குறிக்கப்பட்டுள்ளது

34. 1972ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி.

35. கச்சத்தீவு சேதுபதியின் சீமை; தமிழகப் பகுதி: இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்றும் இவ்வளவு ஆவணங்கள் இருந்தும். கச்சத்தீவுக்குரிய ஆதாரங்களை ஆவணக் காப்பகங்களில் தேடிக் கொண்டிருக்கிறோம் 67657 அமைச்சர் கூறியிருக்கிறார். மேனாள் காங்கிரஸ்

36. பிரதமர் இந்திரா அம்மையாரோ கச்சத்தீவு ஆவணங்கள் அடிப்படையில் இலங்கைக்கு அளிக்கப்படவில்லை. வேறு அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்.

இந்திய நீதிமன்றமும், கச்சத்தீவும்:

கீழக்கரை வாசுதேவன் என்பவர் கச்சத்தீவிற்குச் சில பொருட்களைக் கொண்டு சென்றார். இந்திய அரசின் சுங்க இலாகாவினர் அவரைத் தடுத்தனர். பொருள்களைப் பறித்தனர். வழக்கு உச்சநீதிமன்றம் வரைச் சென்றது. விசாரணை செய்த நீதிபதிகள், “கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே, அங்கு சென்று வாணிகம் செய்ய ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமையுண்டு. இந்தியர் யார் வேண்டுமானாலும் அங்கு போகலாம்” என்று தீர்ப்பளித்தனர்.

ஒருமுறை கச்சத்தீவுப் பகுதியில் ஒருவர் முத்துக்குளித்து எடுத்து வைத்திருந்த சங்குகளை வேறொருவர் திருடிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கை ஏற்று விசாரித்துத் தீர்ப்பளித்தது. இதனால் கச்சத்தீவுப் பகுதியில் சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவைகளின் அதிகாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.

இந்திய அரசின் முன்னாள் வழக்கறிஞர் (Attorney General) நிரேன்டே “அன்றும் சரி, இன்றும் சரி, கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே” என்று கூறினார்.

தமிழக அரசு அதிகாரிகளின் அலட்சியம்:

1972 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட அரசு இதழின் திருத்திய புதுப்பதிப்பு வெளியிடப்பட்டது. அந்நூலின் தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் வரைபடம் அச்சாகியுள்ளது. அந்த வரைபடத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாகக் கச்சத்தீவு காட்டப்படவில்லை. அன்றைய தேதியில் இந்தியப் பகுதியான கச்சத்தீவை விட்டுவிட்டு எப்படி வரைபடம் வரைந்தார்களோ தெரியவில்லை. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் முன்னுரையையும் பெற்றுள்ளனர்.

2) பத்தாண்டுகட்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் குடியில்லாத ஊர்ப் பகுதிகள் கூடத் தவறாமல் குறிக்கப்படுவது வழக்கம். ஆனால் 1951, 1961, 1971 ஆண்டுகளில் ஆள் அற்ற பல இடங்களும், தீவுகளும் குறிக்கப்பட்டிருக்கக் கச்சத்தீவு மட்டும் விடுபட்டுள்ளது. இது தவறான செயல் ஆகும்.

கச்சத்தீவும், நில அளவைத்துறையும்:

1874 ஆம் ஆண்டு இந்திய நில அளவைத் துறை உயர் அலுவலர் கர்னல் வாக்கர் அவர்களும், அவர் உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு அவர்களும் இந்தியாவின் நில அளவைத் துறைக்காகச் சென்னை மாகாணத்தில் அளவை மேற்கொள்ளும்போது கச்சத்தீவையும் அளந்தனர். கச்சத்தீவுக்குக் கச்சத்தீவு தெற்கு, கச்சத்தீவு வடக்கு என்று பெயரிட்டனர். கச்சத்தீவு 285 ஏக்கர் 20 சென்ட் என்று அளந்து கூறினர். கச்சத்தீவுக்கு சர்வே எண்.1250 என்றும் குறித்தனர். அதை ஒரு கல்லிலும் பொறித்துக் கச்சத்தீவில் நட்டனர். அந்தோணியார் கோயில் முன்பும் அக்கள் நடப்பட்டது. அக்கல் இன்றும் உள்ளது. 1874 முதல் 1956 வரை நில அளவை ஆவணங்களில் கச்சத்தீவு இந்தியப் பகுதியாகவே காட்டப்பட்டுள்ளது.

சென்னை மத்திய நில அளவை அலுவலகத்தின் எச்.2. 38482/81, நாள் 29.9.1981 மற்றும் சென்னை நில அளவைப் பதிவாளர் அவர்களது எச்.2, 38495/91 நாள் 11.9.1981 குறிப்பின்படி கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட வரைபடத்திலிருந்து நீக்குவதற்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இராமேசுவரம் கிராமப் புல எண்.1250 சர்க்கார் புறம்போக்கு கச்சத்தீவு ஆர்.சி.எப்.23, 75/83பி ஏ.சி. நான் 6.2.1982 குறிப்பாணையின்படி உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் வட்டாட்சியரும் 118/82 நாள் 19.2.1982 மூலம் இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து கச்சத் தீவை நீக்க டேராடூனிலிருக்கும் இந்திய வரைபட அலுவலகத்திற்குக் கடிதம் எழுதினார். அதன்படி இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து, கச்சத்தீவு நீக்கப்பட்டது.

கச்சத்தீவு தாரைவார்ப்புப் பின்னணி:

1920 ஆம் ஆண்டில் கச்சத்தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சுவார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

28.06.1974ல் கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத்தீவில் உலர வைக்கலாம், ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரசு அரசு.

இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங், “1921ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத்தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத்தீவு. இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.

1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரி களுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்கு வரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) சுச்சத்தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது என ஒப்பந்தமானது.

1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம். சீன ராணுவம் கச்சத்தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது. அதன்படி பார்த்தால் கச்சத்தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு – குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது.

1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின்போது இலங்கை முப்படைகளும் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத்தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க்கப்பல் கஜபாகு கச்சத்தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. தன் படையையோ, அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்தாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க முடியாத இந்திய அரசு மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத்தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்துவிட்டது. இந்திய அரசு கச்சத்தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது.

இலங்கை முப்படையினர் கச்சத்தீவில் முகாம் இட்டும், இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத்தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது. என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும். தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது, அதைவிடப் பெரிய தவறு.

கச்சத்தீவு ஒப்பந்தம்:

இலங்கை மற்றும் இந்திய குடியரசு நாடுகளுக்கிடையே நீண்ட கடல் (Historic Waters) எல்லை சம்மந்தமான விவகாரங்களுக்கான ஒப்பந்தம் 26, 28 ஜூன் 1974; இலங்கை மற்றும் இந்திய குடியரசு நாடுகளுக்கிடையே நீண்ட கடல் (Historic Waters) எல்லை வகுக்கவும் மற்றும் அது சம்மந்தமான விவகாரங்களை நடுநிலையான, தெளிவான, முறையில் தீர்க்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

எல்லா கேள்விகளுக்கும், எல்லா கோணங்களிலும் ஆய்ந்துள்ள நிலையில், அதிலிருந்து வரலாற்று மற்றும் பிற ஆதாரங்களையும், சட்ட நுணுக்கங்களையும் கணக்கில் கொண்டு பின்வருமாறு ஒப்புக்கொள்ளப்பட்டது.

சரத்து -1

கடலில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான எல்லை. பால்க் ஜலசந்தி முதல் ஆதாம் பாலம் வரையிலான பெருவட்டவில் அல்லது பின்வரும் அட்சக்கோடு (Latitude) அல்லது தீர்க்கக்கோடு (longitude)

நிலை 1: 10கு 05 வடக்கு 80கு 03 கிழக்கு

நிலை 2: 9° 05′ வடக்கு 70கு 35 கிழக்கு

நிலை 3: 9° 40.15 வடக்கு 79° 22.60′ கிழக்கு

நிலை 4: 9கு 21.80 வடக்கு 79கு 30.70′ கிழக்கு

நிலை 5: 9° 13′ வடக்கு 79கு 32′ கிழக்கு

நிலை 6: 09கு 06 வடக்கு 79கு 32′ கிழக்கு

சரத்து -2

சரத்து 1 இல் குறிப்பிட்டுள்ள நிலைகளின் ஆயக்கூறுகள் அனைத்தும் புவியியல் श्रण (Co-ordinates) மற்றும் அவற்றை இணைக்கும் நேர்க்கோடுகள் கொண்ட இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவை இரு அரசுகளின் அளவையர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சரத்து -3

கடல் மற்றும் கடல் படுகையின் மேலுள்ள, மேலே குறிப்பிட்ட நிலைகள் யாவும் எந்த முறைமையில் என்பது இதே நோக்கங்களுக்காக முறையே அங்கீகரிக்கப்பட்ட அளவையர்களால், ஏக மனதுடன் தீர்மானிக்கப்படும்

சரத்து – 4

இரு நாடுகளும் தன்னுடைய எல்லைக்குள் கடல், தீவுகள், கண்டத்திட்டுகள், கீழ்மண் மேல் இறையாண்மை, தனிப்பட்ட எல்லை மற்றும் கட்டுப்பாடு கொண்டிருக்கும்.

சரத்து -5

முந்தைய விவகாரங்களால், இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் இதுவரை உள்ளது போல் கச்சத்தீவு நுழைவை அனுபவிக்கலாம் மற்றும் இந்த விசயங்களுக்கு ஸ்ரீலங்காவுக்கு விசாவோ, பயண ஆவணமோ பெற வேண்டியதில்லை.

சரத்து -6

ஸ்ரீலங்கா மற்றும் இந்திய கப்பல்கள் தங்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமையை அனுபவிக்கலாம்.

சரத்து -7

ஏதாவது ஒரு புவியியல்கார் பெட்ரோலியம் அல்லது இயற்கை வாயு வயல்கள் அல்லது ஏதாவது மணல், சரளைகள் மற்றும் கனிமபடிவு வயல் அல்லது புவியியல் அமைப்பு, சரத்து 1-இல் குறிப்பிட்டுள்ள எல்லையை தாண்டி விரிவாக்கப்பட்டால், அந்தப்பகுதி அல்லது வயல், சுரண்டப்பட்ட பகுதி, முழுதும் அல்லது பகுதி, எல்லை எனக் கொண்டு, இரு நாடுகளும் சுரண்டப்பட்ட வயல்பகுதி பற்றி ஒப்பந்தத்திற்குத் தேட வேண்டும். மேலும் எந்த பாங்கில் வரையறுக்கலாம் எனபது பகிர்ந்தளிக்கப்படும்.

கொழும்பு, 26, ஜூன்,1974 புது டில்லி 28, ஜூன், 1974

நீதிமன்றத்தில் வழக்கு:

கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என தமிழக அரசு. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தப்படி கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என இந்திய அரசு, நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயல்.

கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்தான சட்ட விமர்சனங்கள்:

கச்சத்தீவு ஒப்பந்தம் ஈட்ட ஏற்பு பெற வேண்டுமானால் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 368இன்படி, அரசமைப்புச் சட்டப்பிரிவு 1 இல் சட்டத் திருத்தம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய ஒன்றிய அரசு அவ்வாறு மேற்கொள்ளவில்லை. தமிழகத்திற்குச் சொந்தமான ஒரு பரப்பு என்பதால் அதை அந்த மாநில சட்டமன்ற தீர்மானம் மற்றும் ஒப்புதல் பெறவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 3இன்படி மாநில எல்லைகளை மாற்றம் பற்றி செய்யப்படும் சாதாரணச் சட்டம் கூட நாடாளுமன்றத்தில் இயற்றப்படவில்லை.

1974 கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி கடல் எல்லை குறித்த பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது. “பாக். நீரிணைக்கும், ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள இலங்கை இந்திய வரலாற்று நீர் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்” என்று சட்டச் சொற்களில் குறிக்கப்படும் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தாகியபோது 1958 ஆம் ஆண்டு ஐ.நா. சட்டம். செயலில் இருந்தது.

கடல் பரப்பு குறித்த ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தம், 1958 (1958 GENEVA CONVENTIONS ON THE LAW OF THE SEA) நாடுகளுக்கிடையில் கடல் எல்லையை பிரித்துக் கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறையையும் கூறுகிறது. இரண்டு அண்டைநாடுகள் தங்களுக்கிடையிலுள்ள கடல் எல்லையை வரையறுக்கும் போது தங்களுக்கிடையே இருக்கிற கடல் பரப்பை சரியாக பாதி பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கடற்கரையிலிருந்தும் சம தொலைவில் இந்த எல்லைக் கோடு கிழிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக எல்லை வரையறுப்பில் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அவ்வொப்பந்ததில் அதற்கான சிறப்புக் காரணங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

1974 ஒப்பந்தத்தில் சமதொலைவுக் கோட்பாடு (equidistance principle) பின்பற்றப்படவில்லை. இராமேசு வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 30 கடல் மைல், சம தொலைவில் எல்லைக் கோடு வகுப்புதென்றால் 15 மைலில் அக்கோடு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்தால் கச்சத்தீவு இந்திய எல்லைக்குட்பட்டதாகவே நீடித்து இருக்கும். ஏனெனில் கச்சத்தீவு இராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், தலைமன்னாரிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ளது. இவ்வொப்பந்தத்தில் வேண்டுமென்றே சமதொலைவுக் கோட்பாடு மீறப்பட்டுள்ளது.

1974ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் சம தொலைவுக் கோட்பாடு மீறப்பட்டு 10 மைலுக்கு 20 மைல் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. கச்சத்தீவை இலங்கையிடம் அளித்துவிட வேண்டும் என்ற நோக்கம் தவிர, இந்தப் பிறழ்ச்சிக்கு வேறு காரணம் எதுவும் இல்லை, 1958ஆம் ஆண்டு ஐ.நா. சட்டப்படி இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருந்தால் அதனை ஒப்பந்தத்தில் எடுத்துரைத்து நிலைநாட்டியிருக்க வேண்டும். 1974 இந்திராகாந்தி சிறீமாவோ ஒப்பந்தத்தில் அவ்வாறான சிறப்புக் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

கடந்த 47 ஆண்டுகளாக திராவிட ஆட்சிகள் கச்சத்தீவை மீட்பதாக ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பொய்யுரைத்து பின் மறந்து போவார்கள். இவர்களால் கச்சத்தீவிற்கு விடியலில்லை. இந்த மண்ணின் மீது பற்று கொண்ட *நாம் தமிழர் ஆட்சி அமையும்போது மட்டுமே, சரியான திட்டமிடலுடன் செயல்பட்டு கச்சத்தீவு மீட்கப்படும்.

அதுவரை கச்சத்தீவு என்பது, கன்னித்தீவு தொடர்தான்.

திரு. .இராமகிருஷ்ணன்

ஆன்றோர் பேரவைத் தலைவர்,

செந்தமிழர் பாசறைஅமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles