ஆகத்து 2023
செங்கொடி….!
கொடிகாக்கத் – தன்னைக்
கொளுத்திக் கொண்ட உயிருண்டு!
உயிர்காக்கத் தன்னைக் –
கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?
உண்டு:
அதன்பேர் செங்கொடி:
இனிமேல் –
அதுதான் என் கொடி!
தொன்மைத் தமிழரெலாம் – ஒரு
தொப்புள் எழுந்த கொடி: இவள்
தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க –
வெப்புள் விழுந்த கொடி!
இதுதான் –
எனது –
வணக்கத்திற்குரிய கொடி! இதை
வணங்காது வேறெதற்கு முடி?
மூவுயிர் விடு! ஈடாக என் –
பூ வுயிர் எடு!
என்று
எமனிடம் தந்தாள் தன்னை;
செங்கொடி கன்னியாயினும் – மூன்று
சேய்களைக் காத்த அன்னை!
ஆம்;
அந்தக் –
கன்னி தீயானாள்; தீயாகி –
கன்னித் தாயானாள்!
பெருவாரியான நாடுகள்
பெரும்பிழை புரிந்தோரையும் –
சிறையில் வைக்க முயலுமேயன்றி –
சிதையில் வைக்க முயலாது;
ஏன்
எனில் –
சிதையில் வைத்தது தவறென்றால்
சீவனை வழங்க இயலாது!
மரண தண்டனைக்குதான்
மரண தண்டனை தர வேண்டும்;
மானுடர்க்கு
மரணம் –
கயிறு வழி யல்ல;
காலன் வழிதான் வர வேண்டும்!
விழிநிறையக் கனாக்களுமாய்;
விடை தெரியா வினாக்களுமாய்;
இருபது ஆண்டுகள்
இறந்து போனபின்…
இம் மூவர்க்கு
இன்னமும் மீதமாய் –
இருக்கும் வாழ்வையும் – கயிறு
சுருக்கும் என்றால் ….
அது – அரக்கம்
இருக்க வேண்டாமா –
இரக்கம்?
‘கண்ணுக்குக் கண்! எனும்
கருத்தை ஏற்காதவர்
காந்தி;
தபால்
தலையில் மட்டுமல்ல
நாம்
நடக்க வேண்டாமா –
நம்
எண்ணத்திலும் தேசப்பிதாவை
ஏந்தி?
செங்கொடியே என் செல்ல மகளே!
சேவிக்கத் தகுந்ததுன் சேவடி துகளே!
ஒன்றுரைப்பேன்; உன் தியாகத்திற்கில்லை
ஒப்பு;
என்றாலும் – அதை
ஏற்பதற்கில்லை; அது தப்பு!
— கவிஞர் வாலி
(28 ஆகத்து 2011 அன்று மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, தோழர் செங்கொடி தன் உயிரை ஈந்த செய்தி கேட்டு கவிஞர் வாலி எழுதிய இரங்கற்பா)
