ஆகத்து 2025
தென்றல் காற்று
கடலோரத் தென்பாங்குக் கவிதையும் நான்!
தென்னை மரத்தோப்பின் பாட்டும் நான்!
மீனவனைச் சுழற்றியடிக்கும் சூறாவளியும் நான்!
மீனவனுக்கு உற்றதொரு நண்பனும் நான்!
காதலருக்கு மாலை நேரத்தென்றலும் நான்!
அந்தி நேரத்து மதிமயக்கும் கார்முகிலும் நான்!
குளிர்காலத்தில் வீசிடும் வாடைக்காற்றும் நான்!
கொஞ்சி விளையாடி படகசைக்கும் கொண்டலும் நான்!
உணவளிக்கும் உழவனுக்கு உற்ற தோழனும் நான்!
அவர் உழைப்பிற்கு தலைவணங்கிச் செல்வேன் நான்!
பருவம் பார்த்துக் களத்தில் பதறாகப் பறந்திடுவேன்!
நெருப்பாய் எரிந்து நெல்மணியை சோறாகத் தந்திடுவேன்!
ஆலமரத்தையும் அசைத்துப் பார்க்கும் அசுரன் நான்!
புளியமரமும் பயந்து நடுங்கும் பெரும்புயலும் நான்!
உயிர்கள் சுவாசிக்கும் உயிர்க் காற்றும் நான்!
உயிற்ற உடலில் நிலை கொள்வதில்லை நான்!
எண்ணிலடங்காப் பெயரைப் பெற்றவன் நான்!
என்னைப் பெற்றவன் இயற்கையெனும் தெய்வம் தான்!
கண்ணுக்குப் புலப்படுவதிலை காற்றென்று பெயர்க் கொண்டேன்!
காட்டுக்குள் உலாவினேன்! காட்டுத்தீயெனப் பெயர் பெற்றேன்!
உருவம் இல்லையென ஒருநாளும் வருந்தியதில்லை!
உயிர்கள் யாவிற்கும் தேவையென்ற பெருமை கொண்டவன்!
நானில்லா உலகம் நரகமாய் மாறிவிடும்!
நடமாட யாருமின்றி நொடியில் நசிந்துவிடும்!
நன்மரங்கள் நாற்புறமும் இல்லாவிடில் நாளை
நல்ல காற்றும் விற்பனைப் பண்டமாகிவிடும்!
சாலைதோறும் மரங்களை மறவாமல் நடுவோம்!
நாள்தோறும் தூய காற்றை எளிதாகப் பெறுவோம்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.