மே 2023
நிலமிழந்து புலம் பெயர்ந்தோம்!
முள்ளிவாய்க்கால் நிகழ்வுதனை நாம் மறக்க முடியுமா?
மூச்சுக் காற்றுமின்றி உயிர்கள் மடிந்ததையும் மறுக்க முடியுமா?
தமிழீழத்துத் தேயத்தின் வானில் கருமேகங்களும் சூழ்ந்ததே!
குண்டுமழை பொழிந்து தமிழரின் உயிரறுக்கும் ஒத்திகையும் நடந்ததே!
சிதையுண்ட உடலிற்கு நடுவே சீறிவந்தஎறிகணைகளோ
சிறகடித்த இளம் பிஞ்சுகளின் உதிரம் குடித்ததே!
எதிரிகளின் வஞ்சகத்தால் ஏதுமறியாப் பிஞ்சுகளும் மடிந்ததே!
துரோகிகளின் கூட்டுச்சதியால் ஈழதேசமும் செங்குருதியால் சிவந்ததே!
தஞ்சம் புகுந்திட தரணி யெங்கும் தேடியோடினோம்!
தவித்த வாய்க்கும் தண்ணீரின்றிச் சாவினைத் தழுவினோம்!
இரக்கமற்ற அரக்கரும் கொத்துக் குண்டுகளை வீசிட,
பதுங்குக் குழிகளும் எங்களின் குலம் காத்து நின்றதே!
இறந்தோரைப் புதைத்திட காணியிலும் இடமில்லை!
இருப்போரும் வாழ்ந்திட நிரந்தரமான வழியுமில்லை!
எங்கள் கால் தடம் பதிந்த இடமெல்லாம் கண்ணீர்த் துளிகள்!
ஈழ தேசமெங்கும் எண்ணிலடங்கா உயிர்ப் பலிகள்!
உடைமைகளை இழந்து உறவுகளைப் பிரிந்த உள்ளத்தில் வலிகள்!
உரிமைகள் இருந்தும் உணர்வுகள் இருந்தும் முள்வேலிக்குள் விழிகள்!
கருணை கொண்டோரும் கரம் நீட்டி அழைத்திடவே
காணிகளை இழந்து கடல் கடந்தோம் புலம் பெயர்ந்திட!
எங்கள் பயணம் கண்டு நந்திக் கடலும் அழுததம்மா!
திரிகோண மலையும் கண்ணீருடன் கையசைத்து வழியனுப்புதம்மா!
கண்காணா தேசத்திற்குப் பாய்மரப் படகும் விரைந்ததே!
பார்க்கும் திசைகள் எல்லாம் உடைமையிழந்த எம்மக்களே!
அடைக்கலம் நாடியோரை அரவணைத்தார் சில நாட்டினரே!
அன்னையர் நாடொன்று அருகிலிருந்தும் அகதியென்று முத்திரை குத்தியதே!
தொப்புள்கொடி நாட்டிலே சிறப்பு முகாமெனும் சித்திரவதைக் கூடாரம்!
புலம் பெயர்ந்த நாடுகளிலோ எமக்கு தமிழீழமென்று புகழாரம்!
இனமிழந்தோம்! நிலமிழந்தோம்! உணர்வை இன்னும் இழக்கவில்லை!
கடல் கடந்தோம்! நாடு கடந்தோம்! தமிழீழத்தை என்றும் மறக்கவில்லை!
திரு.பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.