மார்ச் 2025
தொலைந்த நட்சத்திரங்கள்
சிறுவன் தன் தாத்தாவிடம் தொலைபேசியில் பேசினான்.
“தாத்தா, நம்ம ஊர்ல வீட்டுக்கு வெளிய கட்டில்ல படுத்துக்கிட்டு நட்சத்திரம் எண்ணினது ஞாபகம் இருக்கா?”
“நினைவிருக்குதே… அதுக்கு என்ன இப்போ?” என்றார் தாத்தா.
“நாங்க இருக்கிற நகரத்துல, அடுக்குமாடிக் குடியிருப்புல இருந்து வெளிய வந்து பாத்தேன். ஒரு நட்சத்திரம் கூட கண்ணுக்கு தெரியல. எங்க பாத்தாலும் தெரு விளக்கு வெளிச்சம் கண்ண கூசுற அளவுக்கு இருக்கு. அதுக்கு அப்பால இருட்டாவே இருக்கு” என்றான் சிறுவன்.
“நட்சத்திரங்கள் பத்தி பாடத்துல நீ தான் முதல் மதிப்பெண் எடுத்தேன்னு சொன்னியே, அது எப்படி எடுத்தே?” என்று கேட்டார் தாத்தா.
“தாத்தா, நான் வானத்தப் பாத்து நட்சத்திரத்த பத்தி சொல்லல. வலையொளிலயும் இணையத்துலயும் படிச்சு சொன்னேன். அதுக்கே எங்க ஆசிரியர்கள் மதிப்பெண் போட்டாங்க” என்றான் சிறுவன்.
“உண்மையாவே நான் கிராமத்துக்கு வந்திருந்தப்ப தான் நம்ம வீட்டுல இருந்து நட்சத்திரங்கள பாத்தேன். அதனாலதான் இப்ப நகரத்துக்கு வந்த பின்பு வானத்த பாக்க எதுவுமே தெரிய மாட்டேங்குது” என்று வருத்தப்பட்டான் சிறுவன்.
தாத்தா அவனை சமாதானப்படுத்திவிட்டு, “கவலைப்படாதே கண்ணா, நீ விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, நாம மறுபடியும் நட்சத்திரங்களை எண்ணலாம்” என்றார்.
சிறுவன் மகிழ்ச்சியுடன் தொலைபேசியை வைத்தான்.
அவன் மனது முழுவதும் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை காண ஏங்கியது. நகரத்தின் வெளிச்சம் அவனைச் சோர்வடையச் செய்தது. கிராமத்தில் தாத்தாவுடன் கட்டிலில் படுத்து நட்சத்திரங்கள் எண்ணிய நாட்களை அவன் நினைத்துப் பார்த்தான்.
அன்று இரவு, சிறுவன் தன் வீட்டு மாடத்தில் நின்று வானத்தை வெறித்துப் பார்த்தான். நட்சத்திரங்கள் எதுவும் தெரியவில்லை. தெரு விளக்குகளின் வெளிச்சம் அவனை மேலும் சோர்வடையச் செய்தது.
வள்ளலார் மாணவன் திரு. க. நாகநாதன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.