spot_img

தமிழும் அறிவும் – தேசிய திராவிடக் கள்ளங்களும் – தமிழரைச் சூழும் வெள்ளங்களும்

சனவரி 2024

தமிழும் அறிவும்தேசிய திராவிடக் கள்ளங்களும் – தமிழரைச் சூழும் வெள்ளங்களும்

பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒருமகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி.  பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்ப பாடசாலையில்  ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.

    மகன் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில்  இரண்டாம் வகுப்பில் படிக்கிறான்.  துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.

   அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.

   ஓய்வு நாள்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுச்செல்வியும், தமிழ்ச்செல்வனும் தமிழரின் வரலாறுகளைப் பேசி, விவாதிக்கும் அறிவான குடும்பம்.

   அறிவும் தமிழும் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் இருவரும் கைகால் முகம் கழுவி, தலைவாரிப் புத்துணர்வு பூண்டனர். வீட்டுப் பாடங்களை தாய் பொற்கொடியின் அரவணைப்பில் செய்து முடித்தனர். மாறனும் பணிமுடித்து வீடு சேர்ந்திருந்தான்.

    தொலைக்காட்சி ஊடகங்கள் தென்மாவட்டங்களின் வெள்ளப்பெருக்கு, மூழ்கிய முக்கிய வீதிகள் என படம் காட்டிக் கொண்டிருந்தன; திராவிட மாடல் போல.

  தென்மாவட்டங்களில் பெருமழை என பகலிலே கேள்விப்பட்டிருந்தாலும், மழையின் தாக்கத்தை அறிந்துகொள்ள வேண்டுமென, வந்த வேகத்திலேயே சாய்விருக்கையில் சரிந்தான் மாறன்.

   மாறன்:- தென் மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது.

பொற்கொடி:-  ஆமாங்க… வரலாறு காணாத மழை என்று அறிவிக்கிறார்கள்.

மாறன்:- எந்தெந்த மாவட்டங்களில்?

அறிவு:- தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் அப்பா.

  பொற்கொடி:- தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும் வெள்ளம்  பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்:-  தாமிரபரணி ஆறு தன் கொள்ளளவை மீறி கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாறன்:- அப்படியானால் சேதம் அதிகமாக இருக்குமே?!

  பொற்கொடி:- கரையோர நகர கிராமக் குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்தது.

அறிவு:- பாலங்கள் சாலைகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தமிழ்:- நிறைய குளங்கள் உடைந்து விட்டதாம் அப்பா!

அறிவு:- பெரும்பாலான மக்கள் வீடுகள், கடைகள், கால்நடைகள் என அனைத்தையும் இழந்து விட்டிருக்கிறார்கள் அப்பா!

மாறன்:- என்ன இது தமிழ்நாட்டிற்கு வந்த சோதனை? இப்போதுதான் சென்னையில் பெரும்வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதங்களை விளைவித்தது.

   பொற்கொடி:- அதற்குள் தென்மாவட்டங்கள் பெரும் துயரத்தைச் சந்தித்துள்ளன.

தமிழ்:-  ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்ய காரணம் என்னப்பா?

அறிவு:-  இயற்கையை அழித்ததனால் தானே அப்பா!

பொற்கொடி:-  இயற்கையை அழிப்பது மட்டுமல்லாமல் புவி வெப்பமயமாகுதலும் சுற்றுச்சூழலை அழித்தலும் முதன்மை காரணங்கள்.

மாறன்:- மழையைத் தாங்கும் விளைநிலங்களை எல்லாம் கான்கிரீட் தளங்களாக மாற்றி விட்டோம்.

தமிழ்:- விவசாய நிலங்களுக்குள் எட்டு வழிச் சாலை பசுமைவழிச் சாலை என விதவிதமாகப் போடுகிறோம்.

  பொற்கொடி:- நீரோடிய ஆறுகளில் லாரிகள் ஓடியதால், இன்று லாரிகள் ஓடும் சாலைகளில் நீர் ஓடுகிறது.

தமிழ்:- இப்படி வெள்ளம் வந்ததற்கு நாமும் தானே காரணம்!?

அறிவு:- என்ன காரணம்?

பொற்கொடி:-  ஆறு குளங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டினோம்.

மாறன்:- மக்கி மண்ணாகிப் போகாத நெகிழி மின்பொறிக்கழிவுகளை நீரோடைகளில் கலந்தோம்.

பொற்கொடி:-  வாய்க்கால்களில் ஓடைகளில் குப்பைகளைக் கொட்டினோம்.

மாறன்:- குளங்கள் ஆறுகள் ஏரிகள் என அனைத்து நீர் மேலாண்மை படிநிலைகளிலும் கழிவுகளைக் கொட்டிக் குவித்தோம்.

பொற்கொடி:- அவற்றைப் பராமரிப்பு செய்யாமல் விட்டோம்.

மாறன்:- அவைகளின் பயன்பாட்டை, அவைகளின் தேவையை, அவை அமைக்கப்பட்டதற்கான காரணத்தை அறியாமல் விட்டோம்.

பொற்கொடி:- அந்த அறியாமையினால் அவற்றை பாழடையச் செய்தோம்.

தமிழ்:-  இவை அனைத்திற்கும் காரணம் நாம் தானே?

அறிவு:-  இவை அனைத்திற்கும் பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்?

பொற்கொடி:- இவை அனைத்திற்கும் அடிப்படை காரணம் நாமே!

அறிவு:-  இதற்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுகள் அதிகாரிகள் தானே காரணம். அவர்கள் மீது தானே நாம் குற்றம் சுமத்த வேண்டும்.

மாறன்:- இவர்கள் திருடர்கள். ஊழல் பெருச்சாளிகள். ஈவிரக்கமற்ற இயற்கை வளச் சுரண்டல்காரர்கள் எனத் தெரிந்தும் இவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தானே குற்றவாளி.

  பொற்கொடி:- அதனால் இவர்களைத் தேர்ந்தெடுத்த நாமே இதற்குப் பொறுப்பு.

மாறன்:-  மரங்களைக் வெட்டி கடத்தினார்கள். மலைகளைத் தகர்த்து விற்கிறார்கள். ஆற்று மணலை ஏற்றுமதி செய்கிறார்கள்.

பொற்கொடி:-   குளங்கள் நீர் வழித்தடங்களில் கல்லூரிகள், அரசு, தனியார் கட்டிடங்கள் கட்டுகிறார்கள்.

தமிழ்:- ஓகோ! இவர்கள் தான்  மலை மூழ்கி மகாதேவன்கள்; தோலிருக்க சுளை விழுங்கும் மாயாவிகள். இவர்களின் கொள்ளைகளைத்
தடுக்கத் தவறிவிட்டோம்.

  அறிவு:- இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

பொற்கொடி:- நமக்கு விழிப்புணர்வு தான் வேண்டும்.

மாறன்:- நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் அதற்கான சட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

பொற்கொடி:- கழிவுகளைக் கண்ட இடங்களில் போடக்கூடாது. கழிவு மேலாண்மை திறம்படச் செய்ய வேண்டும். வடிகால் வசதிகளைச் சுத்தம் செய்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.

மாறன்:- தொழிற்சாலைகளின் கழிவுகளை மறுசுழற்சி செய்வதை அதிகரிக்க வேண்டும். அதற்கான தீவிர கண்காணிப்பு வேண்டும்.

தமிழ்:-  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ஐயாயிரம் என இழப்பீடு தருகிறார்களே!

பொற்கொடி:- அடிப்படைத் தேவையான  துணிமணிகள், உணவுப் பொருட்கள், குடிநீர், இருப்பிடம் தான் தேவை.

மாறன்:- உணவு உடை இருப்பிடம் இவைகள் தான் வேண்டும். இதை இந்த  ஆயிரம், ஆறாயிரம் கொண்டு அவற்றை எவ்வாறு ஈடு செய்ய முடியும்?

பொற்கொடி:- ஆயிரம், இலட்சம் கோடிகளில் வளங்களைச் சுரண்டித் தின்பவர்கள், துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து வாய்க்கரிசி போல் போட்டு வாயை அடைத்து விடுகிறார்கள்.

மாறன்:-  திட்டங்களுக்காகக் கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்து அவற்றில் பெரும்பகுதியைத் தங்களுக்கென்று ஒதுக்கிக் கொண்டவர்கள், மக்கள் துயரிலிருக்கும் போது ஒதுங்கி ஒளிகிறார்கள்.

பொற்கொடி:-  தன்னார்வலர்கள், எதிர்க்கட்சிகள், மக்களுக்கான கட்சிகள், இயன்ற அளவு உணவுப் பொருட்களை வழங்குகிறார்கள்.

தமிழ்:- பெரியப்பா சீமான் அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துத் தேவையான பொருள்களை வழங்கிவருகிறார்.

பொற்கொடி:- நாமும் இந்தக் கடமையில் பங்கெடுத்து, நமது  பங்களிப்பைக் கட்சிக்கு வழங்கி இருக்கிறோம்.

தமிழ்:- எனது சேமிப்பு முப்பத்து இரண்டு உரூபாயைக் கொடுத்தேன்.

அறிவு:- நானும் எனது சேமிப்பு ஐம்பத்தொன்பது உரூபாயை கொடுத்தேன்.

பொற்கொடி:- நல்லது மக்களே! துயருற்ற நம் சொந்தங்களுக்கு உதவுவது நமது கடமையல்லவா? உங்களுக்கு வாழ்த்துகள்.

மாறன்:- ஆட்சியாளர்கள் ஸ்டிக்கரை ஒட்டி உணவுப் பொட்டலங்களைத் தருகிறார்கள்.

பொற்கொடி:- மக்களை நிரந்தரமாக மீட்க எந்தத் திட்டமும் இல்லை. அவர்கள் வாழ்வாதாரத்தைத் திருப்பித் தர எந்த நோக்கமும் இல்லை.

தமிழ்:- ஒன்றிய அரசு ஒன்றும் உதவுவதில்லையே?!

பொற்கொடி:- ஆரிய ஒன்றிய அரசுகள் தமிழர்களின் வளங்களை சுரண்டும்; ஆனால் தமிழர்களைக் கண்டுகொள்ளாது.

அறிவு:- ஏன் அப்படி?

பொற்கொடி:- ஆரியத்திற்கும் தமிழருக்குமான வரலாற்றுப்பகை. தமிழர்களை எப்பொழுதும் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடனே நடத்தும்.

மாறன்:- பாதுகாப்பில் தரைப்படை, விமானப்படை,  கப்பல்படை என முப்படைகளை வைத்துள்ள ஒன்றிய அரசு, எந்த உதவியும் சரியாகச் செய்ய முன் வருவதில்லை. முறையான வானிலை அறிவிப்பு இல்லை.

பொற்கொடி:- துயருறும் மக்களைப் பற்றி கவலையும் இல்லை. பேரிடர் நிதியும் முறையாக வழங்குவதில்லை. பெரும் துயர் நீக்க மனமும் இல்லை.

மாறன்:- மாநிலம்  ஒன்றியத்தை கைகாட்டும்; ஒன்றியம் மாநிலத்தை கைகாட்டும்; மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதில் இரண்டும்  கைகோர்க்கும்.

பொற்கொடி:-  இவர்களது வழக்கம் இது…. பாஜக வந்துடும்…  திராவிடம் தீது…  என இருவரும் மாறி மாறி உரக்க கூவி, ஆரிய திராவிட மாயச் சண்டையை மக்களுக்குக் காட்டி, மறைமுகமாக கைக்குலுக்கிக் கொள்வர்.

மாறன்:- மலைகளைக் குடைய, வளங்களைச் சூறையாட, பெருவழிச் சாலைகள் போட, விமான நிலையம் அமைக்க, நெற்களஞ்சியமாம் தஞ்சையைச் சுற்றி மீத்தேன், ஈத்தேன் எடுக்க என அழிவுத் திட்டங்களைத் தமிழர்கள் மேல் திணிப்பார்கள்.

பொற்கொடி:-  அவர்கள் ஆட்சியை விட மழை அதிகம் என்பார்கள். அதைவிட இப்போது அதிகம் என்று இவர்கள் விவாதிப்பார்கள்.

மாறன்:- அரசேந்திர சோழர் காலத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத மழை எனக் கதையளப்பார்கள்.

அறிவு:-  இதற்கு தீர்வு தான் என்ன?

பொற்கொடி:-  சிறப்பான பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள். மழை வெள்ளம் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் சரியான திட்டமிடல் வேண்டும். வானிலை ஆராய்ச்சிகள் அளவிட்டதை காட்டிலும், அதிகப்படியான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

மாறன்:-  முதலில் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். உணவுப் பொருட்கள், குடிநீர் கைவசம் வைக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இல்லாதவர்களுக்கு முன்னேற்பாடாக ஆயத்த உணவுகளை வழங்க வேண்டும்.

பொற்கொடி:- பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருப்பவர்களைத் தங்க வைக்க மாற்று
ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்தடுத்த மாவட்டங்களில் உணவு தயாரிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.

மாறன்:- வெள்ள அபாயம் வரும்போது நான்கு மணி நேரத்திற்கு முன்பாக மாவட்ட  ஆட்சியாளர் மற்ற அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்துதல் மட்டும் போதாது. அதற்கான கட்டமைப்புகளை மாவட்டம் தோறும் உருவாக்க வேண்டும்.

பொற்கொடி:- மக்களை உடனடியாகக் காக்க களத்தில் இறங்க வேண்டும். வாகனங்கள், படகுகள், உலங்கு ஊர்திகள் எனக் களத்தில் இறங்கி மக்களைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வர வேண்டும்.

அறிவு:- இதற்குப் பெருந்தொகை செலவாகுமே?

பொற்கொடி:- செலவு பிடிக்கும் தான். ஆனால் மக்கள் உயிர் முக்கியம் அல்லவா? மக்களைக் காப்பதை விட இந்த அரசுகளுக்கு என்ன வேலை?

தமிழ்:- பேனா சிலை வைக்கலாம்…  சமாதி கட்டலாம்…

பொற்கொடி:- வருமுன் காப்பதே நல்ல அரசின் கடமை. வந்த பின் உணவு பொட்டலம் வீசுவது அல்ல.

தமிழ்:- வீடுகளை இழந்துள்ளார்களே?

பொற்கொடி:- சூழல் மாறியவுடன் அவர்களை அவர்களது இடத்திற்கே குடியமர்த்த வேண்டும். உடைமைகளை இழந்தவர்களுக்கு உணவு, உடனடி கொட்டகைகள் அமைத்து அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டும்.

மாறன்:-  குடிநீர், மின்சாரம், மருத்துவம் வழங்க வேண்டும். ஓரிரு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குவது என நிர்வாகம் செயல்பட வேண்டும். இது தான் உடனடித் தீர்வாக இருக்கும்.

பொற்கொடி,:-  வீடிழந்த அனைவருக்கும்  வீடுகள் கட்டித் தர வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குவது, வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது என அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது நிரந்தரத் தீர்வாகும்.

மாறன்:- அதுவே அரசின் கடமையாகும். அதுவே சரியான வளர்ச்சி. பாலங்கள், சாலைகள், விமான நிலையங்கள் கட்டுவது வளர்ச்சி அல்ல.

அறிவு:- எல்லாம் சரி. இதனைச் செயல்படுத்த தமிழர்களுக்குத் தகுதியில்லை. எல்லாம் திராவிடம் தான் தந்தது. திராவிடத்திற்குத் தான் அந்த திராணி இருக்கிறது என்று கூவுகிறார்களே!

தமிழ்:-  இவர்களின் திராவிட மாடல்தான் இன்று சிரிப்பாகச் சிரிக்கிறதே!

பொற்கொடி:- திராவிடம்  அப்படித்தான் தமிழர்களை ஏமாற்றும்.

அறிவு:- 60 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள்.  மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆள்பவர்கள்… இவர்களால் செய்ய முடியாதது நாம் தமிழர் கட்சியால் மட்டும் என்ன செய்ய முடியும்?

தமிழ்:- நமது நாம் தமிழர் கட்சிக்கு இதை எப்படி எதிர்கொள்வது எப்படி சீரமைப்பது என்ற திட்டம் இருக்கிறதா?

மாறன்:-  தமிழர்களின் பட்டறிவு உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இனத்திற்கும் இல்லாதது. நீர் மேலாண்மையில் ஆகச்சிறந்த தொழில்நுட்பங்களைக் கையாண்டிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

பொற்கொடி:-  அருவி, ஆறு, ஓடை, ஊற்று, குளம், ஊருணி, குட்டை, ஏரி, ஏம்பல், அகழி் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நீராதாரங்கள் கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

அறிவு:- ஆமாம். தொட்டாலே உதிரும் சிமெண்ட் கட்டிடங்களைக் கட்டும் திராவிட மாடல் போல அல்ல.

மாறன்:- மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கணக்கெடுத்து சரியான வழிகளைக் கண்டறிந்து வடிகால்களை அமைப்பது, கழிவுநீர் மேலாண்மையைத் திட்டமிடுவது, ஆலைக்  கழிவுகளை மறுசுழற்சி  செய்ய வைப்பது,  தொடர்ந்து அதனைக் கண்காணிப்பது என்று பல திட்டங்களை நாம் தமிழர் கட்சி தனது  செயற்பாட்டு வரைவில்  2016 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டிருக்கிறது.

அறிவு:- ஆமாம். நானும் தம்பியும் படித்திருக்கிறோம்.

தமிழ்:- நாம் தமிழர் கட்சி, நீர் மேலாண்மை என இணையத்தில் தட்டினாலே அனைத்து தரவுகளும் வருமே.

பொற்கொடி:- நெகிழியை முற்றிலும் தடை செய்வது, மக்களும் அரசும் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கழிவு மேலாண்மை திட்டத்தை ஒரு வாழ்வியல் முறையாக்குவது…

மாறன்:- நீர் வழித்தடங்களை,  நீர் நிலைகளை இணைப்பது என இன்னும் பல… இதனால்  இயற்கையான மழை நீர் தமிழ்நாடு முழுவதும் சுழன்று கொண்டே இருக்கும். மேலும் அரசு நீர்வழித்தடங்களில் வேலிகளை அமைத்துப் பாதுகாத்து பொதுப்பயன்பாட்டுக்கு வழங்கும்.

தமிழ் :-  இதற்கான நிதி ஆதாரத்துக்கு எங்கே போவது?

பொற்கொடி:-  ஆண்டுக்கு  50000 கோடிக்கு கடல் நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்த முடியும் என்றால்,  ஆண்டுதோறும் அந்தத் தொகையைக் கொண்டு நிரந்தரமாக நீர் நிலைகளை இணைப்பது பெரிய சிக்கல் இல்லை.

மாறன்:- ஒரு முறை செயல்படுத்தினால் போதும்; ஆண்டாண்டும் அதன் பலனை அறுவடை செய்து கொண்டிருக்கலாம்.

பொற்கொடி:- போக்குவரத்து, சுற்றுலா என நீர்வழித்தடங்களையும் பயன்படுத்தி பொருளீட்டலாம்.  எரிபொருள் சிக்கனம் ஆகும்.

தமிழ்:- படகு எல்லாம் போகுமா?

மாறன்:- ஆமாம். இந்த நீர் தமிழ்நாடு முழுவதும்  சுற்றி சுழன்று செல்வதால் நிலத்தடி நீர் உயரும். நீர்நிலைகள் நிரம்பி வழியும்.  எங்கும் நீர்நிலைகள் வற்றாது. கடலில் வீணாகக் கலக்காது.

அறிவு:- இந்த திராவிட அரசுகள் தண்ணீரை கடலில் கலப்பதையே குறியாக வைத்துள்ளனர்.

தமிழ்:- என்ன காரணம் ?

பொற்கொடி:- கட்டமைப்புகளைச் சிறப்பாக செய்து கொடுத்தால், அடுத்தடுத்த ஆண்டுகளில் நிதி ஒதுக்கித் தனக்கெனப் பதுக்க முடியாதல்லவா?!

மாறன்:-  நீர் வழித் தடங்களால் பயிர் பச்சைகள் செழிக்கும். பல்லுயிர் பெருக்கம் ஏற்படும். கால்நடை வளர்ப்பும்  செழிக்கும். மக்கள் வாழ்வாதாரம் உயரும். உற்பத்தியும் பெருகும். நாடும் வளம் பெறும்.
உலக வெப்பமயமாதல் குறையும். காலநிலை மாற்ற ஏற்றத் தாழ்வுகள் மட்டுப்படும்.

  அறிவு:- இதெல்லாம் சாத்தியம் தானா?! இதை எப்படி தமிழர்கள் நிர்வகிக்கப் போகிறார்கள்?!

பொற்கொடி:- 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஓடும் நீரை மறித்துக் கல்லணை கட்டியவர்கள் தமிழர்கள். ஏரிகள், குளங்கள் என  எண்ணற்ற நீர் ஆதாரங்களைக் கட்டமைத்தவர்கள் தமிழர்கள்.

மாறன்:- ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓங்கி நிற்கும் கோவில்களை வடிவமைத்த கட்டிடக்கலையும் தொழில்நுட்பமும் நிறைந்தவர்கள் தமிழர்கள். விண்ணை முட்டும் கோவில் விமானங்களைக் கட்டும் கணக்கியல் அறிஞர்கள் தமிழர்கள்.

தமிழ்:- நிகழ்காலத்தில்  இது போன்ற திறன்களைப் படைத்தவர்கள் யாரும் இருக்கிறார்களா?

பொற்கொடி:- முப்பதாண்டுகளுக்கும் மேலான  பொருளாதாரத் தடையும், போராட்ட வாழ்வுமான நிலையிலும், அறம் சார்ந்த ஒரு தேசத்தைக் கட்டி எழுப்பியவர்கள் தமிழர்கள்.

மாறன்:- எரிபொருள் கட்டுப்பாடு, வளங்கள் கட்டுப்பாடு, உணவுக் கட்டுப்பாடு என அனைத்து தட்டுப்பாடுகளுக்கும் இடையில் தற்சார்பாக ஒரு விமானத்தை உருவாக்கி, தொலைத்தொடர்புச் சாதனங்களையும் வடிவமைத்து வல்லாதிக்க நாடுகளின் தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளி, எதிரி நாட்டின் இராணுவ விமான தளத்தில் அதன் கண்காணிப்புக் கட்டுப்பாடு, எதிர் தாக்குதல் அனைத்தையும் முறியடித்து விமான தளத்தைத் தரைமட்டம் ஆக்கியவர்கள் தமிழர்கள்.

பொற்கொடி:- பெருந்தலைவரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் 70 ஆண்டுகளை கடந்து இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

மாறன்:-  இவை அனைத்தும் தமிழர்கள் மரபணுவில் ஊறிக் கிடக்கிறது. எரிமலைக் கனலாய்த் தகித்துக் கொண்டிருக்கிறது வெடித்துச் சிதற.

பொற்கொடி:- சாதி, மதம், மது, திரை மாயை என திசை திருப்பப்பட்ட தமிழ்ச்சமூகம் இன்று திமிறி எழுகின்றது.

மாறன்:- ஆரிய திராவிட கீரிச்சண்டைப் பாம்பாட்டிகளை விடுத்து, நாம் தமிழர்களாக இணைந்தால் நாடு வசப்படும்; நிலமும் வளமும் காக்கப்படும்.

பொற்கொடி:- திருட்டு திராவிட, ஆரிய வளக்கொள்ளைகளைப் பொறுக்கமுடியாமல், இயற்கையே இன்று தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பொங்கி எழுந்திருக்கிறது.

மாறன்:-  நாம் தமிழர்களாக எப்போது பொங்கப்போகிறோம்? அந்நாளே தமிழினத்தின் விடியலுக்கான புதுப் பொங்கல்.

அனைவரும்:-  உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும், தமிழ்ப்புத்தாண்டு, தைப்பொங்கல், தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

நாம் தமிழர்! நாம் தமிழர்!! நாம் தமிழர்!!!

திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles