மார்ச் 2025
அரசியல் ஆத்திச்சூடி
அ ன்பில்லா ஆட்சியிலே அதிசயம் நடக்காது… ஆட்சியும் பல நாள் நிலைக்காது… அதை எண்ணிப் பாருடா தமிழா!
ஆ யிரம் கோடி இருந்தென்ன பயன்?
இ றந்த பிறகு உன்னுடன் வருமா? நினைத்து பாருடா தமிழா!
ஈ கைக் குணமும் இன்முகச் சிரிப்பும் இல்லை என்றால் நீ பிறந்தென்ன பயன்…? நினைத்துப் பாருடா தமிழா!
உ யிருக்கு உயிராய் மக்களை நினைத்தால் உன் புகழுக்கு இறப்பேது உற்றுப் பாருடா தமிழா!
ஊ ருக்கு நான்கு நல்லவர் இருந்துவிட்டால் அது போதாதா… சிந்தித்துப் பாருடா தமிழா!
எ ருதின் நோய் காக்கைக்குத் தெரியாது… அதன் பசி அதற்கு… பிறர் பசியை எண்ணிப் பாருடா தமிழா!
ஏ டுகள் தோறும் எங்கள் தாய்த்தமிழ் வரலாறு மறைகிறது… இது ஏன் என்று கேட்க நாதியில்லையே… தமிழர்களின் வீரம் எங்கே ?
ஐ ந்திணை நிலங்களையழித்து ஆள்வது நல்லாட்சியா? உறங்கும் தமிழா வீறுகொள் தமிழா!
ஒ ற்றுமை இல்லாத் தமிழர்களே… இனியாவது நாம் தமிழரென்று ஒன்றுபடு… இதைச் செய் அல்லது செத்து மடி தமிழா!
ஓ டியாடி விளையாடிய குழந்தைகள் இன்று ஓய்ந்து கிடப்பது ஏனோ ? இயற்கை உணவைத் தேடி ஆரோக்கியம் பெறு தமிழா!
ஔ வை நூல் வழி நாம் நடந்தால் அகிலம் போற்றும் நாடாகும் நம் தமிழ்நாடு…
சிந்தித்துப் பார்த்து உன் வாக்கைச் செலுத்து தமிழா!
உடல் தமிழ் மண்ணிற்கு; உயிர் தமிழுக்கு என்று நாம் சூளுரைப்போம் தமிழா!
திரு. சி.தோ.முருகன்
செந்தமிழர் பாசறை – குவைத்.