spot_img

முத்தமிழ்க் கடவுள் முருகனுக்கு மாநாடு – பாஜகவின் பம்மாத்து தமிழகத்தில் பலிக்காது!

சூலை 2025

முத்தமிழ்க் கடவுள் முருகனுக்கு மாநாடு – பாஜகவின் பம்மாத்து தமிழகத்தில் பலிக்காது!

இந்தியா முழுவதும் பரவியுள்ள முருகப்பெருமான் கோவில்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை:

முத்தமிழ் கடவுளான முருகப்பெருமான், இந்தியாவின் பல பகுதிகளில், பல்வேறு பெயர்களில் மக்களால் வணங்கப்படும் ஒரு சக்திவாய்ந்த கடவுள். எண்ணற்ற கோவில்கள் இவருக்கு இந்தியாவில் அமைந்துள்ளன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல பழம்பெரும் மற்றும் சிறிய கோவில்கள் உள்ளன. வட இந்தியாவிலும் சில குறிப்பிடத்தக்க கோவில்கள் முருகப்பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. முருகப்பெருமானின் இந்த பரவலான வழிபாடு, இந்திய துணைக்கண்டம் முழுவதும் தமிழர்கள் பரவி வாழ்ந்ததற்கான ஒரு தெளிவான சான்றாக அமைகிறது.

தென் இந்தியாவில் முருகப்பெருமானின் கோவில்கள்:

தமிழ்நாடு: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான பழனி, சுவாமிமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்) ஆகியவை அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற தலங்கள். இவை தவிர, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு பெரிய முருகன் கோவில்களும், எண்ணற்ற சிறிய கோவில்களும் அமைந்துள்ளன. இந்தக் கோவில்கள் முருகப்பெருமானின் பெருமையையும், தமிழர்களின் பக்தி மரபையும் பறைசாற்றுகின்றன.

கர்நாடகா: இம்மாநிலத்தில் குக்கே சுப்பிரமணியா கோவில், நாகலமடகா, கட்டி சுப்பிரமணியா போன்ற கோவில்கள் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மேலும், பாதாமி குகைக் கோயில்களில் கார்த்திகேயனுக்குரிய சிலைகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆந்திரா: நெல்லூர், புத்தூர் (சுப்பிரமணிய சுவாமி கோவில்), சித்தூர், குண்டூர், விஜயவாடா ஆகிய நகரங்களிலும் முருகப்பெருமான் கோவில்கள் அமைந்துள்ளன.

கேரளா: திருச்சூர் மற்றும் அரிப்பாடு (ஹரிப்பாடு) ஆகிய இடங்களில் முருகப்பெருமானுக்குரிய கோவில்கள் காணப்படுகின்றன.

மேற்கு மற்றும் வட இந்தியாவில் முருகப்பெருமானின் கோவில்கள்:

மேற்கு வங்காளம்: மேற்கு வங்காள மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பன்ஸ்பேரியாவில் அமைந்துள்ள ராஜா கார்த்திக் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு கார்த்திகேய பூஜை 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பன்ஸ்பேரியா மட்டுமல்லாமல், சுச்சுரா, பர்தமானில் உள்ள கட்வா மற்றும் பூர்வஸ்தலி, பாங்குராவில் உள்ள சோனமுகி, மற்றும் முர்ஷிதாபாத்தில் உள்ள பெல்தங்கா போன்ற இடங்களும் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று கார்த்திகேய பூஜைக்காகப் புகழ் பெற்றவை. இது மேற்கு வங்காளத்தில் கார்த்திகேயர் வழிபாடு பரவலாக இருப்பதை உணர்த்துகிறது.

மகாராஷ்டிரா: மும்பையில் திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற அழகான ஒரு கோவில் அமைந்துள்ளது.

வட இந்தியா (கார்த்திகேயன்/கார்த்திக் என்ற பெயர்களில்): உத்தரகாண்டில் உள்ள ருத்திரபிரயாகை கார்த்திகேய சுவாமி கோவில் ஒரு முக்கிய தலமாகும். இது கர்வால் இமயமலையில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகேய பூர்ணிமா நாளில் பக்தர்கள் மணிகளைக் கட்டி வழிபடுகிறார்கள். ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட் போன்ற வட மாநிலங்களிலும் பல தொன்மையான முருகன் கோவில்கள் இருப்பதாகவும் தகவல்கள் உள்ளன.

இந்திய ஒன்றியம் முழுவதும் பரவலாகக் காணப்படும் முருகப்பெருமான் கோவில்கள் மற்றும் வேல் வழிபாடு, இந்திய துணைக்கண்டம் முழுவதும் தமிழர்கள் பரவி வாழ்ந்த வரலாற்று உண்மையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துகிறது. முருகன் உருவாக்கிய தமிழை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழில் எழுத மனமில்லை; ஆனால் தமிழ்நாட்டின் முருகனுக்கு மாநாடு எடுக்கிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள்! முத்தமிழ்க் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்தும் பாஜகவின் பம்மாத்து தமிழகத்தில் பலிக்காது! ஒரு நாளும் பலிக்காது!

திரு. நாகநாதன்,
செந்தமிழர் பாசறை – வ‌ளைகுடா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles